THF Announcement: ebooks update: 29/9/2013 *அகிலாண்டநாயகி மாலை*

0 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

அகிலாண்டநாயகி மாலை

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 351

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி



திருவாவடுதுறை மடத்தின் வரவேற்பு பகுதியில் மேற்சுவற்றில் உள்ள படங்களில் ஒன்று. ஆன்ம நாத சுவாமி வாதவூரடிகளுக்கு ஸ்பரிஸ தீட்ஷை செய்வதைக் காட்டும் சித்திரம்.

----
அகிலாண்ட நாயகி கோயில்கொண்டு விளங்கும் ஆனைக்கா
திருத்தலமே ஒரு நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட
அற்புதமான தலமாகும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் பாடிய சிவத்தலம் திரு ஆனைக்கா; காவை என்பது தலத்தின் மற்றொரு பெயர். சிவாலயம் அரனாரின் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. காவிரி வடகரைச் சிவத்தலங்களில் இது அறுபதாவதாக திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது


இறைவரின் திருப்பெயர் - நீர்த்திரள்நாதர். இத்திருப்பெயரை இவ்வூர்த் திருத்தாண்டகத்தில்  அப்பர் பெருமான் ``செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே`` எனப் பாடியுள்ளார்.  இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று வேறு திருப்பெயரும் உண்டு. வெண்ணாவல் மரத்திற்கடியில்
எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு -நாவல்).


சிலந்தி ஒன்று இலிங்கத் திருமேனிக்கு மேல் விதானம்போல் வலை அமைத்துத் தொண்டு செய்தது. அதுவே மறுபிறவியில் கோச்செங்கட் சோழ மன்னராகப் பிறந்தது என வரலாறு.


சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். அகிலாண்ட ஈசுவரி கோயில், ஜம்புநாதர் கோயில் இவற்றின்  தளவரிசைகளைச் செய்தவர் பாஸ்கரராயர் ஆவார்.


இறைவியின் பெயர் அகிலாண்ட நாயகி. கவி காளமேகம் இந்த இறைவியின் அருள் பெற்றவர். இவர் செய்த நூல் திருவானைக்கா உலா. ஸதாசிவ மகி காவை நூல்கள் என எழுதியுள்ளார்.


ஆதி சங்கரர் அன்னையின் செவிகளில் தாடங்க ப்ரதிஷ்டை செய்ததாக வரலாறு. ஸ்ரீ முத்து ஸ்வாமி தீக்ஷிதர் அவர்களும் அன்னையைப் பாடியுள்ளார்.
-தேவ்.

----


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: ebooks update: 29/9/2013 *அகிலாண்டநாயகி மாலை*"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES